Aug 25, 2026 - 08:30 PM





டித்வா புயலினால் சேதமடைந்த கச்சிமடுவ குளத்தின் வான் பகுதி உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்கும் 3 திட்டங்கள் புத்தளம், ஆனமடுவை பகுதிகளில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த ஆகியோரின் தலைமையில் இந்த நிவாரண புனரமைப்புத் திட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சேதமடைந்த நீர்ப்பாசனம் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 2026 ஆம் ஆண்டில் 5,000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் ஏற்பட்ட போது கொட்டுக்கச்சிய மற்றும் மஹவ பகுதிகளின் மனித உயிர்களையும் வீடுகளையும் பாதுகாத்து பேரழிவைக் கட்டுப்படுத்த முடிந்ததை நினைவூகூர்ந்த அமைச்சர், தொழில்நுட்ப மற்றும் மனித வள பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்ததாகக் கூறினார்.
இதற்கமைய கச்சிமடுவ குளம், லபுகல குளம் மற்றும் கல்கிஸ்ஸ அணைக்கட்டு உட்பட அப்பகுதியிலுள்ள அனைத்து நீர்ப்பாசன அமைப்புகளையும் முந்தைய நிலையை விடவும் பலமாகவும் மிகச் சிறந்த முறையிலும் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேதமடைந்த போதிக்காராம விகாரையின் தம்பிட்ட விஹாரேகே பகுதியும் கலாச்சார அமைச்சின் தலையீட்டுடன் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை வெற்றி கொள்வதற்கு இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் அப்பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.























