Sep 7, 2026 - 05:38 PM

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க என்ற மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அந்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

























