Sep 7, 2026 - 07:36 PM

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலையானவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய நபராவார்.
கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

























