Sep 12, 2026 - 08:54 PM

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட இந்த அரிய காட்சி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு பச்சைக் கொடி அசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.
மறுபுறம், சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது 16ஆம் எண் கொண்ட அதிநவீன 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கி இந்தச் சவாலான பந்தயத்தில் பங்கேற்கிறார்.
பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் மற்றும் விளையாட்டுத் துறைகளின் முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்த சந்திப்பு, இணையதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.





























