Sep 14, 2026 - 06:51 PM

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக செப்டெம்பர் 18ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் (14) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, அன்றைய தினம் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது.
சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தொலைக்காட்சி நேர்காணலொன்றில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரா? என்பது குறித்து ஆராயுமாறு கோட்டை நீதவான் செய்திருந்த குறிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.
இதன்போது மனுதாரரான திலித் ஜயவீர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரரின் நிரபராதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, சர்ச்சைக்குரிய குறித்த நேர்காணலை திறந்த நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு கோரினார்.
அந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தொடர்புடைய வீடியோவை நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்ட பின்னர், இந்த ரிட் மனுவை அது தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டெம்பர் 18ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.





























