Sep 14, 2026 - 08:15 PM

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்திருந்த வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்தவுடன் வீட்டுக்குள் கைக்குண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமை CCTV காட்சிகளை பரிசோதித்தபோது தெரியவந்துள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தாயின் அன்பையும் இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது இளைய சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் அவர்களின் 55 வயதான தந்தையின் காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளடன், அவரும் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எவ்வாறாயினும், தந்தை தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்து, வீடு மாறியதால் இந்த சோகமான சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி பின்னர் இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஸ்தல நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்களின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





























