Aug 12, 2026 - 04:59 PM

மும்பையில் பிரபல நடிகை வீட்டிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் வசித்து வரும் பிரபல ஹிந்தி நடிகை லோபமுத்ரா ராவத் மாடலாகவும் வலம் வந்த இவர், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். கடந்த ஜூலை 14 ஆம் திகதி இரவு நடிகையின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாந்தாகுரூஸ் பொலிஸ் நிலையத்தில் நடிகை புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். அப்போது பீகாரைச் சேர்ந்த சந்தன் முகியா என்பவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சந்தன் முகியா கொள்ளையை எப்படி அரங்கேற்றினார் என்பது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
நடிகையின் வீட்டை சந்தன் முகியா கடந்த ஜூலை மாதம் முதலே நோட்டமிட்டு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பல நாட்களாக கண்காணித்த அவர், ஜூலை 14 ஆம் திகதி இரவு கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். நடிகையின் வீடு 5 ஆவது மாடியில் இருந்த நிலையில், அங்கு செல்வதற்காக மூங்கில் தட்டையை பயன்படுத்திய சந்தன் முகியா, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.
பின்னர் படுக்கையறைக்குள் சென்று அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றிருக்கிறார். கொள்ளையடித்த பொருட்களுடன் அதே வழியாக வெளியேறிய அவர், சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முழு கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றி தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிஸார் சந்தன் முகியாவின் செல்போன் எண் மற்றும் இருப்பிடத் தகவல்களை வைத்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பீகாருக்கு சென்ற மும்பை பொலிஸார், அங்குள்ள உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன் சந்தன் முகியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கைக்கடிகாரம், 30 லட்சம் மதிப்புள்ள 2 தங்கக் கட்டிகள் மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும்.
ஆனால், நடிகையின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொருட்களும் இதுவரை மீட்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வேறு யாரிடமாவது சந்தன் முகியா பதுக்கி வைத்துள்ளாரா? கொள்ளையடித்த பொருட்களை விற்பனை செய்ய அவரது உறவினர் உதவினாரா? நடிகையின் வீட்டை நோட்டமிடும் போது சந்தனுக்கு வேறு யாராவது உதவினார்களா? என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய சந்தன் முகியாவுக்கு உதவியதாக கூறப்படும் அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 5 ஆவது மாடியில் துணிச்சலாக புகுந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்மநபர் சிக்கியிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















