Aug 22, 2026 - 09:05 PM





எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது, மொனராகலை மாவட்டத்தின் 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மக்களுக்கும் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28,523 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அம்பாறை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் 8,783 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 7,882 நபர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் 7,876 நபர்களும், பொலன்னறுவை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,646 நபர்களும் இந்த வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 499 நபர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 515 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்குமான வேலைத்திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

























