Sep 3, 2026 - 09:33 PM

21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 20 மில்லியன் சிறுவர்கள் ஒரு வருட காலத்தில் டிஜிட்டல் தளங்கள் ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட, இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு வகையான பாலியல் துஷ்பிரயோகத்திற்காவது முகங்கொடுத்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அங்கு சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் தேவையற்ற பாலியல் உள்ளடக்கங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதுடன், 9 மில்லியன் சிறுவர்கள் பாலியல் உரையாடல்களில் ஈடுபட அல்லது பாலியல் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 மில்லியன் சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் வெளிப்படைந்துள்ளது.
அறிக்கையின்படி, இச்சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் முகநூல் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ஸ்னப்செட்(Snapchat) மற்றும் டிக்டொக் (TikTok) போன்ற சமூக ஊடக தளங்கள் மூலமாகவே நடந்துள்ளன. இணையவழி விளையாட்டுகள் (Online Games) சார்ந்த சம்பவங்களின் அளவு சுமார் 14 சதவீதமாகும்.
இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் சிறுவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவரே தொடர்புபட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். மேலும் 38 சதவீத சம்பவங்களில் சிறுவர்கள் முதலாவதாக துஷ்பிரயோகம் செய்தவரை இணைய வழியிலேயே அடையாளம் கண்டுள்ளனர்.
அத்துடன், சிறுவர்கள் தொடர்பான இச்சம்பவங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவையே பொலிஸார், சமூகப் சேவையாளர்கள் அல்லது உதவிச் சேவைகளுக்குப் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் யுனிசெப் (UNICEF) தெரிவிக்கிறது.
செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் பாலியல் உள்ளடக்கங்கள் குறித்தும் இவ்வறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
தரவுகள் சேகரிக்கப்பட்ட 9 நாடுகளில் சுமார் 1.1 மில்லியன் சிறுவர்கள், தங்களைச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பாலியல் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.
தொழில்நுட்பம் ஊடாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளான சிறுவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் அல்லது தமக்குத்தானே சுய தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் பதிவாவது, ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் சுமார் நான்கு மடங்கு அதிகம் என்றும் யுனிசெப் சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆராய்ச்சி 2020 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 21,000 சிறுவர்களை உள்ளடக்கி நடத்தப்பட்டுள்ளதுடன், இது இவ்வாறான அமைப்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாகும் என்றும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு நடைமுறைகளைப் பலப்படுத்துதல், புதிய வகையான துஷ்பிரயோகங்களை உள்ளடக்கும் வகையில் சட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் புகாரளிக்கும் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துமாறு யுனிசெப் அரசாங்கங்களிடமும் தொழில்நுட்ப நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.



























