Sep 3, 2026 - 10:04 PM

220kV மற்றும் 132kV உயர் அழுத்த மின் கடத்திகளுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் மற்றும் கட்டமைப்பு உப மின்நிலையங்கள் அருகிலோ அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ பட்டங்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய அமைப்பு இயக்குபவர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், பட்டங்கள் மற்றும் அவற்றின் நூல்கள் மின் கடத்திகளில் சிக்குவதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் மின் கடத்தி தடங்கள் செயலிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மின் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மின் கடத்தி பாதைகள் தானாகவே துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கடத்தி பாதைகளில் சிக்கியுள்ள பட்டங்கள் மற்றும் நூல்கள் பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் கீழ் தற்போது கைமுறையாக அகற்றப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பதற்கும் காரணமாக அமையக்கூடும்.
இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நேற்று (2) தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அவசர நடவடிக்கையாகத் தெரிவுசெய்யப்பட்ட சில விநியோக மின் இணைப்புகளை (Feeders) துண்டிக்க வேண்டியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, குறித்த மின் இணைப்புகளுடன் தொடர்புபட்டிருந்த சில நுகர்வோரின் மின் விநியோகத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.



























