Sep 3, 2026 - 10:26 PM

இம்முறை 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த குருணாகல், எஹெடுவெவ மாதிரி ஆரம்பப் பாடசாலையின் தனோஜ் தீக்ஷண வீரசேகர என்ற மாணவனின் திறமையைப் பாராட்டி மனுசத் தெரணவால் விசேட பரிசுகளும் புலமைப்பரிசில்களும் இன்று (3) வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 289,867 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், அவர்களுள் 56,000 மாணவர்கள் 139 புள்ளிகள் என்ற வெட்டுப்புள்ளியைக் கடந்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அனைத்து மாணவர்களையும் மிஞ்சும் வகையில் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை தனோஜ் என்ற மாணவன் பெற்றார்.
தனோஜின் இந்த மகத்தான வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், தெரண மற்றும் மனுசத் தெரணவின் நிறுவுனர் திலித் ஜயவீரவை சந்திக்கும் விசேட நிகழ்வொன்று இன்று மனுசத் தெரண அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தனோஜின் தந்தை, பாடசாலை அதிபர் மற்றும் அவரது சகோதரியும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தனோஜின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மடிக்கணினி (Laptop) ஒன்று வழங்கி வைக்கப்பட்டமையுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வரையிலான அவரது மேல் படிப்பிற்காக மாதாந்த புலமைப்பரிசில் தொகையை வழங்கிடவும் 'மனுசத் தெரண' நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர, 2018 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தற்போது வர்த்தகப் பிரிவில் உயர்தரம் பயிலும் தனோஜின் சகோதரிக்கும் புத்தகங்கள் உள்ளடங்கலாக கல்வி உபகரணத் தொகுதியொன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



























